Thursday, June 18, 2009

பதிலைத் தேடிய கேள்விகள்...




ஏழு நண்பர்கள் என்னை இந்த தொடர் பதிவிற்கு அன்போடு அழைத்திருக்கிறார்கள்,
எட்டாவதாக ஒருவர் என்னை அழைக்க விரும்பி இருந்தார், முதலில் இந்த எட்டு
பேருக்கும் எனது நன்றிகள்...


1. உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது…? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா…?

எங்கள் ஊரில் திருவிழாக்கள் கொண்டாடும் வழக்கமில்லை திருமணம் மற்றும் பெயர்சூட்டு விழா போன்றவற்றைத் தான் ஒவ்வொரு வீட்டிலும் திருவிழாவாக கொண்டாடுகிறார்கள். அப்படியொரு சிறு விழாவில் பெற்றோர்கள், உறவினர்கள் மற்றும் பெரியோர்களால் சூட்டப் பட்டது எனது பெயர். எனவே, என் பெயர் எனக்கு மிகவும் பிடிக்கும்.

எனக்கு பெயர் சூட்டும் போது இரண்டு வயது இருக்கும்...



அப்போது நான் இப்படித்தான் இருந்தேன்...

புதியவன்” என்பது பள்ளி, கல்லூரி நாட்களில் கவிதைகள் எழுதிய போது எனக்கு நானே வைத்துக் கொண்ட புனைப் பெயர். பதிவுலகிற்கு வந்த போது அந்த பெயரிலேயே எழுத ஆரம்பித்து விட்டேன்...இந்தப் பெயரும் எனக்கு மிகவும் பிடிக்கும்...

2. கடைசியாக அழுதது எப்பொழுது…?

நெகிழ்வான நிகழ்வுகள் மனதை நெருடும் போது கண்களில் நீர் துளிர்க்கும்...கடைசியாக எப்பொழுதென்று நினைவில் இல்லை...

3. உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா…?

என்னுடைய கையெழுத்து அழகாக இருக்காது என்றாலும்...பிடிக்கும்...

4. பிடித்த மதிய உணவு என்ன…?

தேனும் திணை மாவும் எனக்குப் பிடிக்கும் என்று சொன்னால் எந்த நூற்றாண்டில் வாழ்கிறீர்கள் என இன்னொரு கேள்வி கேட்க்கப் படலாம், வீட்டை விட்டு வெகு தொலைவில் இருப்பதால் மதிய உணவில் பெரிதாக கவனம் செலுத்துவதில்லை...

5. நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா…?

என் வானத்தில் நட்பு நட்சத்திரங்கள் மிக அதிகம் அவர்களுக்கான
எனது முதலீடு ஒரு சிறு புன்னகை மட்டுமே...
புன்னகைப்பதற்கு நான் அதிக நேரம் எடுத்துக் கொள்வதில்லை...

6. கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா…?

அருவியில்...

7. முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்…?

விழிகள் பேசுவதை மொழி பெயர்த்தால் மனதில் உள்ளதை
புரிந்து கொள்ள முடியும் என்பதால், முதலில் விழிகள்...

8. உங்க கிட்ட உங்களுக்கு பிடித்த விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன…?

பிடித்த விசயம் : பிறர் மனம் புண் படாமல் பேசுவது
பிடிக்காதது : அதீத பொறுமை என்னும் கூட்டுக்குள் அடைபட்டுக் கிடக்கும் அதீத கோபம்...

9. உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விஷயம் எது…?

சரி பாதின்னா...ஓ...கவிதையை பற்றிய கேள்வியா...?

என் கவிதை
கொஞ்சும் போதும்
கெஞ்சும் போதும்
எப்போதும் அழகு
சிணுங்கும் போதோ மிக அழகு
இவையெல்லாம்
எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று
பிடிக்காததென்று எதுவும் இல்லை
பிழையில்லாக் கவிதையில்
குறை காண முயல்வது
முதல் குற்றம்
கவிதையின்றி
கவிஞன்
தனித்து செயல் பட
நினைப்பதும் குற்றமே...

10. யார் பக்கத்தில் இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள்…?

தூரங்களெல்லாம் வெறும் இடைவெளிகள் மட்டுமே அவற்றையும் அவர்களின் நினைவுகள் கொண்டே நிரப்பி வைத்திருக்கிறேன்...
எல்லோரும் எப்போதும் என் மனதின் பக்கத்தில் இருப்பதால் வருந்துவதில்லை...

11. இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள்…?

கிரீம் கலர் பேண்ட் கருப்பு நிற ஷர்ட்...

12. என்ன பாட்டு கேட்டுக் கொண்டு இருக்குறீங்க…?

சுதா ரகுநாதனின் மயக்கும் குரலில் ”அனல் மேலே பனித்துளி”...

13. வர்ண பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை…?

என்னவள் விழியின் வண்ணம்...அட...கருப்பு தாங்க...

14. பிடித்த மணம்…?

மண் வாசனையும்
மழலை வாசனையும் பிடிக்கும்
அவள் கூந்தலில் இருக்கும் போது மட்டும்
மல்லிகை வாசனை பிடிக்கும்,
அவள் வாசனை
பிடிக்காது என்று சொன்னால்
காதல் கவிதை எழுதுவதற்கு
நான்
தகுதியற்றவனாகிவிடுவேன்...

15. நீங்க அழைக்கப் போகும் நபர்கள் யார் யார்…? ஏன் உங்களுக்கு அவர்களை பிடித்து உள்ளது. அவர்களை அழைக்கக் காரணம் என்ன…?

எனக்குத் தெரிந்த அனைவரும் எழுதி விட்டதால் யாரை அழைப்பதென்று தெரியவில்லை...

16. உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு…?

1. இரவீ
2. வழிப்போக்கன்
3. ஜீவன் அண்ணா
4. ரோஸ்
5. மயில்
6. குடந்தை அன்புமணி
7. ஸ்ரீமதி
8. தமிழரசி

தனித்தனியே பிரித்து சொல்ல முடியவில்லை, எனவே இவர்களின் அனைத்து பதிவுகளும் பிடிக்கும் என்று சொல்லலாம்...

17. பிடித்த விளையாட்டு…?

பள்ளியில் படிக்கும் போது கிரிக்கெட்
கல்லூரியில் டென்னிஸ்
எப்போதும் செஸ்
இப்போதும் அதுவே...

18. கண்ணாடி அணிபவரா…?

இந்த பதிவு எழுதும் போது கண்ணாடி அணிந்திருக்கவில்லை...

19. எப்படிப் பட்ட திரைப்படம் பிடிக்கும்…?

மென்மையான காதல் சொல்லும் படங்கள் மற்றும்
வன்முறையில்லாத நகைச்சுவை படங்கள்...

20. கடைசியாகப் பார்த்த படம்…?

Angels and Demons...

21. பிடித்த பருவ காலம் எது…?

இலையில் வழியும்
ஒரு துளியில்
விரல் நனைக்க
மனம் நனையும்
பனி படர்ந்த
அந்த அழகிய
மார்கழி மாதம்...

நான் பிறந்ததும் அந்த மாதத்தில் தான்...

22. இப்பொழுது படித்துக்கொண்டு இருக்கும் புத்தகம்…?

மாலனின் ”வழி தவறிய வண்ணத்துப் பூச்சிகள்”...

23. உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்…?

மாற்றுவதில்லை...

24. உங்களுக்கு பிடித்த சத்தம்…? பிடிக்காத சத்தம்…?

மூங்கில் துளைத்து வெளி வரும் சுவரங்கள் அனைத்தும் பிடிக்கும்

அபசுவரங்கள் பிடிக்காது...

25. வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு…?

எங்க வீட்டில் இருந்து ஏறக்குறைய 3,145,000 மீட்டர்...
(சிங்கப்பூர்)

26. உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா..?

இந்த கேள்விகளுக்கு பதில் எழுதுவதற்கே பெரிய திறமை
வேண்டும் போலிருக்கே...

27. உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்…?

நம்பிக்கை துரோகம்...

28. உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்…?

சாத்தான்களெல்லாம் காதல் கற்றுக் கொண்டதில் சமத்தா ஆகிடுச்சுங்க...

29. உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்…?

இயற்கை எழில் கொஞ்சும் எந்த தலமும் எனக்குப் பிடிக்கும்...

30. எப்படி இருக்கணும்னு ஆசை…?

தீயோர்க்கும் நல்லவனாக...

31. மனைவி இல்லாம செய்ய விரும்பும் காரியம்…?
(இதையே நான் இப்படி எடுத்துக் கொள்கிறேனே...)
கவிதை இல்லாம செய்ய விரும்பும் காரியம்…?

கேள்வி (9) திற்கான பதிலில் கடைசி நான்கு வரிகளை மட்டும் படித்துக் கொள்ளுங்கள்...

32. வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க..?

இறைவன் எழுதிய கவிதை
மனிதன் வாழும் வாழ்க்கை,
வாழ்வின் இலக்கணங்களை மட்டுமே
அவன் எழுதியனுப்புகிறான்
இலக்குகளை
நாம் தான்
தேர்ந்தெடுத்துக் கொள்கிறோம்

நாம் தேர்ந்தெடுக்கும் இலக்கு
இனிப்பு சுவை சொட்டும்
தேனாக இருக்கட்டும்
வலிக்கக் கொட்டித்
துடிக்கச் செய்யும்
தேளாக இருக்க வேண்டாமே...



ஒரு அறிவிப்பு நண்பர்களே...


நெடுநாட்களாக
நான்
நேசித்து எழுதிய
காதலொன்று
நான் வாசிப்பதற்காக
காத்திருக்கிறது...


எனவே,

விடுமுறையில் ஊர் செல்கிறேன் நண்பர்களே, இதுவரை என் எழுத்துக்களை வாசித்து கருத்தூட்டமிட்டு உற்சாகமளித்த அனைவருக்கும் எனது மனம் நிறைந்த நன்றிகள்...இறைவன் நாடினால் வலையின் வழியே சிறிது இடைவெளிக்குப் பிறகு மீண்டும் சந்திப்போம் என்று கூறி உங்களிடமிருந்து விடை பெறுகிறேன்...


நிகரில்லா நட்புடன்,

- புதியவன்.




Thursday, June 4, 2009

காதல் கடிதங்களென...


பகலின் மேலுதட்டில்
இரவு முத்தமிட
கீழ்வானம்
வெட்கத்தில் சிவந்தது

அந்தியில்
நீ
சந்திக்க வருவதாய்
சொன்னதிலிருந்து
சிந்திக்க ஏதுமின்றி
நேரத்தை
நிந்திக்கத் தொடங்கினேன்

கையில்
நீ
அனுப்பிய
கடிதத்துடன்
உன் வருகைக்காக
காத்திருக்கும்
எல்லா நேரங்களிலும்
எப்படியாவது வந்து
ஒட்டிக் கொள்கிறது
மாலை நேரமும்
ஒரு அழகு நிலாவும்

உன் எச்சில் தொட்டு
ஒட்டியனுப்பாத
கடிதங்களை
காதல் கடிதங்களென
என்னால்
ஏற்றுக்கொள்ள முடியாது
அவை
வெறும் வெற்றுக்
காகிதங்கள் மட்டுமே...

அல்லிக் குளத்தில்
வளர்ந்திருந்த
மல்லிச் செடிகளெல்லாம்
உன் வரவுக்காக
ஒற்றைக் காலில்
தவமிருக்கின்றன

சற்று தாமதமாய்
வந்த நீ
தாமதிக்காமல்
ஒரு புன்னகைப் பூவை
பறித்து வைக்கிறாய்
மலர்களெல்லாம்
மலர்வதற்கு
கற்றுக் கொள்கின்றன...

ஒரு மலரை கொய்து
பரிசளிக்கிறேன்
என் மனதைக்
கொய்து போய்விடுகிறாய்
எனக்குத் தெரியும்
இது மலர்களுக்குள்
தீட்டப் படும்
பழிவாங்கும் திட்டமென...

காதல் சாலையெங்கும்
வெட்கம் விதைத்துச்
செல்கிறாய் நீ
முத்தம் விளைவதற்காய்
காத்திருக்கிறேன் நான்...

என் கை விரல் பட்டு
அறுந்து விழுந்த
உன் கால் கொலுசின்
தெறித்துச் சிதறிய
மணிகளின் ஒலியில்
என்
மனவெளியெங்கும்
சிதறிக் கிடந்தன
சில
கவிதைகள்................



Thursday, May 21, 2009

காதல் வந்த காலமெது…?


பெயர் தெரியாத
பெண் குழந்தைகளையெல்லாம்
நான்
உன் பெயர் சொல்லி
அழைத்த போது
தொடங்கியிருக்க வேண்டும்...

அல்லது...

என் பெயர் சூட்டப் பட்ட
ஆண் குழந்தையை
பெயர் சொல்லியழைக்க
நீ
தயங்கி நின்ற போதேனும்
ஆரம்பித்திருக்கக் கூடும்...

இல்லையெனில்...

எப்போதும்
என் கண்ணைப் பார்த்து
பேசும் நீ
முதன் முதலாய்
மண்ணைப் பார்த்துப்
பேசும் போதாவது
தோன்றியிருக்கலாம்...

அதுவும் இல்லையெனில்...

கொஞ்சம் கொஞ்சமாய்
பேச ஆரம்பித்த
நீ
கொஞ்சிக் கொஞ்சி
பேச ஆரம்பித்த போது கூட
நிகழ்ந்திருக்கலாம்
அந்த மாற்றம்...

இவையெதுவும் இல்லையெனில்...

நம் விழிகளின்
விலகாத பார்வை
சற்றே விலகி
உன் வெட்கத்தில் விழுந்து
முத்தத்தில் நனைந்த வேளையில்
தானும் சேர்ந்தே
நனைந்திருக்கலாம்
நம்முடனான காதல்.....

எத்தனையோ பெண்கள்
இருக்கையில்
என்னை மட்டும்
உனக்குப் பிடித்துப் போனதெப்படி...?
இது
ஆயிரம் முறை நீ
என்னிடம்
கேட்ட கேள்வி...

ஒரு முறையேனும்
உனக்கு சொல்ல நினைத்து
சொல்லாத பதில்...

வேறு யாரைப் பார்க்கும் போதும்
உயிர்க் காற்று
என் உள்சுவாசம் மறுத்ததாய்
இதுவரை
என்
நினைவில் இல்லையடி..................


Thursday, May 7, 2009

காதல்…ஒரு அழகிய முரண்பாடு…


மலர் சூடிச் சென்ற
பெண்களில்
என் மனம் சூடிச்
சென்றவள் நீ
மலர் வாடினால்
தூக்கி எறிகிறாய்
என் மனம் வாடினால்
அணைத்து
மகிழ்விக்கிறாய்
காதலில் மட்டும்
என்ன ஒரு அழகிய
முரண்பாடு...

மயிலிறகை புத்தகத்திற்குள்
வைத்தால் குட்டி போடுமாமே
உன் கூந்தல்
இழையும் கூட
அப்படித்தானோ...?

உனக்காக காத்திருக்கும் பொழுது
வாலறுந்த பட்டமென
தத்தளிக்கும் மனது
நீ
அருகில் வந்த உடன்
நூலறுந்த பட்டமாய்
உன் கூந்தலுக்கிடையில்
சிக்கிக் கொள்கிறது

தட்டுத் தடுமாறி
பேச ஆரம்பித்தாலும்
தெளிவாகப் பேசி விடுகிறாய் நீ
தெளிவாகப்
பேச ஆரம்பித்தாலும்
முடிவில்
தடுமாறி விடுகிறேன் நான்...

இன்று முழுதும்
நீ வீட்டை விட்டு
வெளியே வரவில்லை
உன்னைப் பார்க்காமல்
இனி மலர்வதில்லை என்று
தீர்மானம் நிறைவேற்றி
இருக்கின்றன
நீ
வெட்கம் ஊற்றி வளர்த்த
உன் தோட்டத்து
மலர்களெல்லாம்

உன் புன்னகை திருடிப்
பூத்திருக்கும்
ரோஜாக்களில் மட்டும்
முட்கள் இருப்பதில்லை

நிழல் தேடி
நாம் மரம்
ஒதுங்குவது போல்
உன் மனம் தேடி
என் உயிர் ஒதுங்குமிடம்
நம் காதல்

நிலவின் ஒளியை மட்டுமே
உண்டு வாழப் படைக்கப் பட்ட
சக்கரவாகப் பறவை போல
உன் வெட்கத்தை மட்டுமே
உண்டு வாழ
காதல்
என்னை படைத்திருக்கிறது
உன் வெட்கம் குறையும்
சில நேரங்களில் மட்டும்
உன் முத்தங்களையும்.........



Thursday, April 30, 2009

எதனை பரிசெனத் தருவது…?


உனக்குப் பிடிக்குமென
கவிதை சமைக்க
வார்த்தைகளைத் தேடி
கடற்கரை சென்றிருந்தேன்
காலையில் நடந்து சென்ற
உன் கால் தடங்களைத்தான்
கவிதைகளென
கடலலைகள்
எடுத்துச் செல்கின்றனவாம்

நேற்றிரவு
உன் வீட்டு மாடியிலிருந்து
நிலாவை
ரசித்துக் கொண்டிருந்தாயாமே
நிலா சொன்னது
அதுவும்
உன்னைத் தான்
ரசித்துக் கொண்டிருந்ததாம்

இன்று உன் வீட்டு வழி
கடந்து செல்ல நேரிட்டது
அங்கே
உன் கொலுசொலி வாங்கி
சங்கீதம் பயின்றன குயில்கள்
உன் முடிந்த கூந்தல்
அவிழக் கண்டு
மழைமேகம் கண்டதாய்
தோகை விரித்தன மயில்கள்
உன் அழகு நடை கண்டு
நடை பழக வந்தன மான்கள்

நானும் வந்தேன்
உன்னிடதில் காதல் பழக
மற்றவையெல்லாம் நிமிடத்தில்
கற்றுக் கொடுக்கும் நீ
காதலை கற்பிக்க மட்டும்
ஏனோ...?
காலம் கடத்துகிறாய்

நீண்ட நெடியதொரு
பார்வை பரிமாற்றத்திற்குப் பின்
ஒரு சுபயோக சுபதினத்தில்
சுவாசங்கள் பேசிக்கொள்ளும்
தூரத்தில்
உன் வெட்கத்தை சாட்சியாக வைத்து
நம் இதழ்களின் முத்தத்தால்
மாலை மாற்றிக் கொள்கிறது
நம் காதல்

பூக்கள் பறித்து பரிசளிக்க
பூந்தோட்டம் போயிருந்தேன்
உன் கூந்தல் சூடி
உதிர்ந்த பூக்களைத் தான்
பூஜைப் பூக்களென
பூத் தூவி
பூஜிக்கின்றன
அந்த
பூந்தோட்டப் பூக்களெல்லாம்

இங்கே தான்
வேறெதுவும் கிடைக்கவில்லையென
காற்றில்லாத நிலவில்
காதல் பரிசு தேடினேன்
இங்கிருந்து அங்கு சென்ற
ஒன்றிரண்டு
தேசத்துக் கொடிகள் தவிர
வேறொன்றும் அங்குமில்லை

காதல் சொன்ன உனக்கு
நான்
எதனை பரிசெனத் தருவது...?
எதை வேண்டுமானாலும் கேள்
தருகிறேன்,
என்னில் இருக்கும்
உன்னைத் தவிர..………………



(அனைவருக்கும் உழைப்பாளர் தின வாழ்த்துக்கள்...)


Thursday, April 23, 2009

பெய்யெனப் பெய்யும் காதல் மழை…


ஆகாயம் ஆனந்தமாய் பொழிந்த
அடைமழை நாளொன்றில்
கொஞ்சம் நனைந்து நீயும்
கொஞ்சம் நனையாமல் நானும்
ஒரே குடையில் நாமிருவரும்
குடைக்குள் மொத்தமாய்
நனைந்திருந்தது நம் காதல்...

ஐந்து வயது சிறுவனின்
ஐந்து வருட தவத்திற்குக்
கிடைத்த வரம் நீ...?
ஆம்,
நான் பிறந்து
ஐந்து வருடத்திற்குப்
பிறகு தானே நீ பிறந்தாய்....

ஐந்து நிமிடம் காத்திருந்ததற்காக
என் மேல் கோபப்படுகிறாய்
நான் கூடத்தான்
பிறந்து ஐந்து வருடங்களாக
உன் பிறப்பிற்காகக் காத்திருந்தேன்
அதற்காக
ஏன் இவ்வளவு தாமதமாகப்
பிறந்தாயென்று
உன் மேல் கோபப்படவா முடியும்...?

ஏழு வண்ணத்திலும்
வெட்கப்படும் வானவில் நீ
என் கைகளின் அணைப்பிற்குள்
இருக்கும் போது மட்டும்
எட்டாவது வண்ணத்திலும்
வெட்கப் படுகிறாய்...

எத்தனை முறை சொன்னாலும்
கேட்பதே இல்லை
உன் விரலையாவது
தொட்டுவிட்டுத்தான் போவேன்
என்று அடம்பிடிக்கிறது
இந்த மழைத்துளி
அதற்கும் என்னை போல்
பிடிவாதம் கொஞ்சம் அதிகம் தான்...

மழையில் நனைந்தபடி
யாருமற்ற புல்வெளியில்
என் கைப்பிடித்து நடந்தாயே
அன்று போல்
என்றும் உணர்ந்ததில்லை
நிறைவான நம் காதலை...

துளி மழை
தூரல் மழை
சாரல் மழை
அடை மழை
ஆலங்கட்டி மழை
ஏன்
அமில மழை கூடப்
பார்த்திருக்கிறதாம்...
உன் பாதம் பட்டதில் தான்
முதன் முதலாய்
அமிர்த மழை
பார்க்கப் போவதாய்
பெருமை பட்டுக்கொள்கிறது
இந்த பூமி....

சட்டெனப் பொழியும்
முத்த மழையின் போது
உன் மின்னல் வெட்கத்தில்
என் கண்களும் சேர்ந்தே
மூடிக் கொள்கின்றன
இப்போது தான் புரிகிறது
முத்தமிடும் போது ஏன்...?
கண்கள் தாமாகவே
மூடிக்கொள்கின்றனவென்று...

மழை நின்ற பின்னும்
தொடரும் மண்வாசம் போல்
நீ
விலகிச் சென்ற பின்னும்
விலகாமல்
என்னைத் தொடர்கிறது
உன் வாசம்...


Wednesday, April 15, 2009

உன் வெட்கத்தை கொஞ்சம் காவல் வைத்து...


இமை மூடி
இமை திறக்கும் நேரத்தை
ஒரு வினாடி
என்கிறோம் நாம்
உன் இதழ் மூடி
இதழ் திறக்கும்
நேரத்தைத் தான்
தேவவினாடி
என்கின்றனர் கவிஞர்கள்

உன் இமைகள் இமைக்கும்
அழகைப் பார்த்தே
பட்டாம்பூச்சிகள்
பறப்பதற்கு பழகிக்கொள்கின்றன
நீ பிறப்பதற்கு முன்பு வரை
அவை வெறும்
கூட்டுப்புழுக்களாக மட்டுமே
வாழ்ந்து
மடிந்திருக்கக் கூடும்...

தாஜ்மஹாலின்
மாதிரி வடிவம்
ஓவியனின்
கண்ணீர்த் துளிகளால்
வரையப்பட்டதாம்
மும்தாஜின்
மாதிரி வடிவத்தை
உன்னைப் பார்த்து மட்டுமே
வரைய முடியும்
என்கின்றனர் ஓவியர்கள்

உன் விழிகளின்
சிணுங்கலில் தான்
நம் காதல் பிறந்தது
உன் இதழ்களின்
சிணுங்கலில்
சிந்திய சில
துளிகளில் தான்
என் அனேக கவிதைகளும்
பிறக்கின்றன...

உனக்காக
காத்திருக்கும் வேளை
கண்ணாடிக் காகிதத்தில்
மடிக்கப்பட்ட கற்பூரமாய்
கரையாத காலம்
நீ வந்த உடன்
காகிதம் பிரிக்கப் பட்ட
கற்பூரமாய்
காதலில் கரைந்து காற்றாகிறது

காற்றில் கலைந்த
உன் துப்பட்டாவை
நீ
சரி செய்த போது தான்
முதன் முதலாய்
என் மனதும்
கலைந்து போனது
என்பது
உனக்குத் தெரியுமா...?

உன் இதழின் ஈரம்
காற்றில் களவு போகாமலிருக்க
இதழ் சார்ந்த பகுதிகளில்
உன் வெட்கத்தை கொஞ்சம்
காவல் வைத்ததில்
முன்னூறு முத்தங்களை
நம் இதழ்களே களவாடிவிட்டன
இனியொரு முறை
சரியாக எண்ணிப் பார்க்க வேண்டும்
இன்று முதல்
களவு போகும்
முத்தங்களின் எண்ணிக்கை
சற்றே கூடுதலாகக் கூட
இருக்கக் கூடும்......................



Saturday, April 4, 2009

தேவதைகள் கொண்டாடும் தினம்…



மகரந்த மழையில்
நனைந்த வண்டென
மயக்க நிலையில் நான்
உறக்கம் கலைந்தும்
கலையாத கனவு போல்
இன்று
சில நினைவுகள்...

அது...
அன்னப் பறவைகள்
பாலில் இருந்து நீரைப்
பிரித்தெடுப்பது போல்
பகலில் இருந்து இரவைப்
பிரிக்கத் துடிக்கும்
அந்தி நேரம்

முதன் முதலாய் எனக்காக
அன்று நீ
பட்டுப் புடவை அணிந்து வந்த
அழகைப் பார்த்து
உயிர் துறந்தால்
உன் உடல் தொடலாம்
என்ற ஆசையில்
தற்கொலைக்கு தயாராயின
அந்தத் தோட்டத்து
பட்டுப் பூச்சிகள்

வெட்கத்தின் காரணமாய்
அப்போது
சிறிது இடைவெளி விட்டு
அமர்கிறாய்
நம் இருவருக்குமிடையே
வெட்கமில்லாமல் வந்து
அமர்ந்து கொள்கிறது
நம் காதல்

விழிகளில் பேசியே
களைத்துப் போன
நீ
அருகிலிருந்த
மரத்தில் சாய்கிறாய்
உன் ஸ்பரிசத்தில் சிலிர்த்து
பூக்களை உதிர்த்தது
அந்த ஒற்றைப் பூவரசமரம்
இலையுதிர் காலத்தையும்
பூவுதிர் காலமாக
மாற்றி விடுகிறாய்...

எத்தனை முறை வாசித்தாலும்
முடிவதாயும் இல்லை
திகட்டுவதாயும் இல்லை
சிணுங்கும்
இந்த இருவரிக் கவிதை
முடிவில்லா கவிதைக்கு
முற்றுப் புள்ளியா
அந்த இதழோர மச்சம்...?

உன் வெட்க ஒளியில்
நட்சத்திரங்களாய் பிரகாசிக்கின்றன
நம் முத்தங்கள்
சற்றே கூடுதல் பிரகாசத்துடன்
விடிவெள்ளியாய் மின்னுகிறது
நம் முதல் முத்தம்...
என்ன இருந்தாலும்
நம் முதல் முத்தத்தின் போது
உன் வெட்கத்தின் அளவு
கொஞ்சம் அதிகம் தான்...

வருடத்தில்
ஒரு முறை வரும்
இந்நாளுக்காக
வருடம் முழுதும்
காத்திருக்கிறேன்
ஏனெனில்,
இன்று தேவதைகள்
கொண்டாடும் தினம்

தேவதைகள் மண்ணில்
பிறப்பதில்லை
எனினும்,
என் மனதில்
பிறந்த தேவதைக்கு
உன் காதலாலான இதயத்தின்
இனிய
பிறந்தநாள்
நல்வாழ்த்துக்கள்.....................



(என் வரவை எதிர் பார்த்துக் காத்திருக்கும் உனக்கு என் வாழ்த்துக்களை மட்டுமே வழியனுப்ப முடிகிறது...)

Friday, March 27, 2009

காதலுக்கு கொள்(கை)ளை அழகு...


தொடு வானம் தொட முடியாத தூரத்தில்
தொட்டுக் கொண்டிருக்கிறது
நீயோ
தொடக் கூடிய தூரத்திலிருந்தும்
இன்னும் தொடாமலே இருக்கிறாய்

துடுப்பில்லாத படகில் ஏறி
வெறும் கைகளினால்
ஒதுக்கித் தள்ளப்பட்ட
மேக அலைகளின் ஊடே
காற்றில்லாத கிரகத்தில் அமர்ந்து
கடும் தவம் இருப்பது சுலபம்
உணர்ந்த காதலை
உணர்த்தியவளிடம் சொல்லி விட்டு
இப்படி அவள் பதிலுக்காக
காத்திருப்பதை விட...

காதலை ஏற்றுக் கொண்ட
நீ
காலம் வரும் வரை
நம் காதலுக்கென்று
சில விதி முறைகளை
விதித்துக் கொள்கிறாய்
தொட்டுக்கொள்வதில்லை
கட்டிக்கொள்வதுமில்லை
’முத்தம்’....ம்ஹூம்...
அந்தப் பேச்சுக்கே இடமில்லை

நம் காதலில்
எனக்கிருந்த சில எதிர் பார்ப்புகளை
எதிர்கால ஆசைகளின்
சேமிப்பு வங்கியில்
பாதுகாத்து வைத்துவிட்டேன்
என்ன செய்வது....?
இதயத்திற்கு எட்டியது
இன்னும்
இதழ்களுக்கு எட்டவில்லையே...

அதுவரை சுடிதார் மட்டுமே
அணிந்து வந்த நீ
இப்போதெல்லாம் வெட்கத்தையும்
சேர்த்தே அணிந்து வருகிறாய்
காதல் என்றதும்
பெண்களின் நிழலுக்கு கூட
வெட்கம் வந்து விடுகிறது

எத்தனையோ முறை
உன் கண்களைப் பார்த்திருக்கிறேன்
அப்போதெல்லாம்
மின்மினிப் பூச்சிகளின்
மெல்லிய வெளிச்சத்தைப்
பார்ப்பது போல் பழகிய உன் விழிகள்
இந்தக் காதல் வந்த உடன்
மின்னலின் வெளிச்சத்தை போல்
சட்டென ஒளி பெற்று விடுகிறதே

காலம் காதலில் கரைந்து
இடைவெளி கொஞ்சமாய் குறைந்து
விதி முறைகள் மெல்லத் தளர்ந்ததில்

இப்போது...
நம் மூச்சுக் காற்றில்
முட்டி மோதிய உயிர்க் காற்று
மீண்டும் மீண்டும் முயன்று
முடியாமல் தோல்வியுற்று
அருகிலிருந்த மரத்தின்
இலைகளில் அமர்ந்து
களைத்துப் போய்
இளைப்பாறத் தொடங்கியது

இங்கே...
இடைவெளி தொலைத்த
இதழ்களின் தழுவலில்
முகவரி தெரியாத
மோட்சத்தின் வழிகளைத் தேடி
முந்திச் செல்கின்றன
நம் முத்தங்கள்...

விதி முறைகள் மீறப் படாமல்
இருப்பது தான் கொள்கைக்கு அழகு
ஆனால்,
கொஞ்சமாவது மீறப் படுவது தானே
காதலுக்கு கொள்ளை அழகு.............


Friday, March 20, 2009

நீ இல்லாத பொழுதுகளில்...



அங்கு உன் இமைகளை நீ மூடுகிறாய்
இங்கு என்னை இருள் சூழ்ந்து கொள்கிறது
இனி எனக்கான வெளிச்சம்
உன் விழிகளிலிருந்து
மட்டுமே பெறக் கூடும்

என்னைக் கவர்வதற்காக
நீ
எந்த ஒரு முயற்சியும்
செய்திருக்கவில்லை
என்பதொன்றே
என்னக் கவர்ந்திருந்தது

அன்று தான்
உறவுகளால் அங்கீகரிக்கப்பட்ட
மனம் சேர்ந்த
நம் காதலின் நிச்சயதார்த்தம்

உன் கூந்தல் சூடியிருந்த
மலர்களின் வாசம்
உன் கைகளில் கரைந்திருந்த
மருதாணி வாசம்
இவையெல்லம் தாண்டி
வீடு முழுதும் வசப்பட்டிருந்தது
உன் செல்லச் சிரிப்பின் வசம்

உறவுகள் சூழ்ந்திருக்க
ஒருவரும் அறியாது
நாம் கைகோர்த்த நிமிடங்கள்
முத்தமிட்டுக் கொண்ட
நம் விரல்களைப்
பார்த்து பொறாமை கொண்டன
நம் இதழ்கள்

நீ அணிந்திருந்த
மிஞ்சியின் சத்தத்தில்
கொஞ்சி விளையாடிக் கொண்டிருந்த
நம் கால் விரல்கள்
என் கைகளுக்குள் சிக்காமல்
நீ காப்பாற்றி வைத்த
உன் கண்ணாடி வளையல்

உன் இமைகள் இமைக்கும்
ஓசை கேட்டு
இமைக்க மறந்திருந்த நிமிடங்கள்
என் விரல்கள்
உன் கூந்தல் கலைந்த போதெல்லாம்
உன் விழிகள்
என் மனதைக் கலைந்த
அந்த அழகிய தருணங்கள்

இவையெல்லாம்
நினைவுபடுத்துகின்றன
நீ இல்லாத பொழுதுகளில்
என்னிலும் அதிகமாய்
என்னில்
நீ
நிரப்பி வைத்திருக்கும்
உன் காதலை................


Friday, March 13, 2009

மெல்லிய பூக்களிலெல்லாம்...


உன் வெட்கத்தைக் கொஞ்சம்
கடன் வாங்கி மெல்லச் சிவந்தது
அந்தி வானம்
உன் ஒரு துளி வியர்வை பட்டு
அணையத் தொடங்கியது
மாலை சூரியன்

கடற்கரை மணற்பரப்பில்
உனக்காக நெடுநேரம் காத்திருக்கிறேன்
கோடானகோடி ஆண்டுகளாய்
உன் வரவுக்காக
அங்கு கடலும் காத்திருந்தது

முதன் முதலாய்
உன்னைப் பார்த்த மகிழ்ச்சியில்
அன்று கடல் அலையின் வேகம்
சற்று கூடித்தான் போயிருந்தது

அதுவரை கரை தாண்டிடாத கடலலைகள்
உன் பாதத்தையாவது
தொட்டு விட முயன்று கொண்டிருந்தன
நீயும் முயன்று கொண்டிருந்தாய்
என் கண்களுக்குள் சிக்கியிருந்த
உன் அழகைக் காப்பாற்றுவதற்காக

உன் கூந்தலில் சூடிக்கொள்வதற்காக
கிள்ளியெடுக்கப் பட்ட
மெல்லிய பூக்களிலெல்லாம்
அள்ளித் தெளிக்கப் பட்டிருந்தது
என் தொடுதலின் போது
உன் முகத்தில் பூத்திருக்கும்
வெட்கத்தின் வண்ணம்

ஊடலென்பதே கூடாதென்றிருந்தேன்
காதலில் நாம் மட்டும் விதிவிலக்கா என்ன...?
ஒன்றுமில்லாத ஒன்றிற்காக
நமக்குள் ஒரு சிறு ஊடல்
நீ என்னிடம் கோபமாயிருக்கிறாய்
தொட்டாலே பார்வையால் சுட்டுவிடுகிறாய்
என்ன செய்வது...?

அதுவரை முத்தம் கொடுத்த
குழந்தை சட்டென
கன்னத்தைக் கடித்துவிட்டால்
கோபமா வரும்...?
அள்ளியெடுத்துக் கொஞ்சத்தானே தோன்றும்
எனக்கும் அப்படித்தான் தோன்றியது...
முடிவில் யார் தான் வென்றது...?
வென்றது காதல்...
எப்படி...?
மனதில் தோன்றியதை
அப்படியே கடைபிடித்ததில்
ஊடல் தோற்றுவிட்டது.............


இந்த கவிதையை யூத்ஃபுல் விகடனில் படிக்க இங்கு செல்லலாம்...

 

Friday, March 6, 2009

எனக்கானதொரு தேவதை...


ஒளியின் வேகத்தை விஞ்சியிருந்தது
அந்த இரவின் இருள்
நம் பால்வெளி தாண்டி
பக்கத்து நட்சத்திரத்தில்
காத்திருந்தது எனக்கானதொரு
தேவதை...

வெளிச்ச இறகுகள் கொண்டு
வேயப்பட்டிருந்தது
அந்த தேவதையின் சிறகுகள்
நிலவின் ஈர்ப்பு விசைக்குக் கட்டுப்பட்ட
கடல் அலை போல அவள் பார்வையில்
என் எண்ண அலைகளும் கட்டப்பட்டிருந்தது…

தொலைந்து போவதற்கென்றே
தேடப்பட்ட என் மனது
மீண்டும் அவளிடமே
தொலைந்து போயிருந்த வேளையில்
விழிகள் நாணேற்றியதில்
அவளின் வெட்கம்
ஒடி ந்து...உ டை ந் த து...

சரியா..? தவறா...?
என்று சிந்திக்கும் முன்பே
ஆர்வமிகுதியில்
முடிந்தும் முடியாமல் போன
முத்தங்களின் மிச்சம்
அவள் இதழ்களின் நெருக்கத்தில்
நொறுங்கி விழுந்தது

உதடுகள் உரசிக் கொண்டதில்
உதிரத்தொடங்கி இருந்தது
அவளின் தேவதைக் காண
அடையாளச் சிறகுகள்
காதலிப்பதற்கு எதற்கு சிறகுகள் என்று
நினைத்துக் கொண்டிருக்கும் பொழுதே
என் பின்னங் கழுத்துப் பகுதியில்
தண்டுவடத்தின் தொடர்ச்சியாக
சிறகுகள் வளர்வதாய்
ஓர் உள்ளுணர்வு...
உணர்வுகள் உண்மையாயின்
நாளை முதல் வேலையாகப்
பறப்பதற்குப் பழகிக்கொள்ள வேண்டும்
இல்லையெனில்...பாதகமில்லை
மீண்டும் இன்னொரு நாள்
இது போன்றதொரு
தேவதைக் கனவு
வராமலா போய்விடும்........?


Friday, February 27, 2009

என்னை கவர்ந்தவர்...எல்லோரையும் கவர்ந்தவர்...!?


என்னை கவர்ந்தவர் என்ற தொடர் பதிவில் என்னை இணைத்த ஜீவன் அண்ணா அவர்களுக்கு என் நன்றிகள்...பிடித்தவர் என்றால் எல்லோரையும் தான் பிடிக்கும். ஆனால், அனைவரையும் பட்டியலிட முடியாதே...அதனால் என்னை மிகவும் கவர்ந்தவர் என்று சொல்வதைவிட நான் பார்த்து அதிசயித்தவர் பலர். அதில் மிக முக்கியமான ஒருவர்...இயற்பெயர் “எக்னஸ் கோஞ்செ பொயாஜியூ”

இவரைப் பற்றி சில வரிகள்....

யூகொஸ்லாவியா நாட்டிலிருந்து
புறப்பட்டது ஓர் வெள்ளைப் புறா
கருவில் உயிரை சுமந்ததில்லை எனினும்
தன் அதீத அன்பில்
உலகின் உயிரையெல்லாம்
தன் கருணை இல்லத்தில் சுமந்தவர்
தேசம் தாண்டி உலகுக்கெல்லாம்
அன்பென்ற ஒரே தேசியகீதம் பாடியவர்
பார்வையால் தொடுவதைக் கூட
நம்மில் பலர் அருவருக்கும்
தொழு நோயாளிகளை
தொட்டுத் தூக்கித் துடைத்தெடுத்து
அன்பும் ஆதரவும் காட்டியவர்
1979ம் ஆண்டு வரை சாதனையாளர்களை
பெருமைப் படுத்திக் கொண்டிருந்த
நோபல் பரிசு
இவருக்கு வழங்கப்பட்டதால்
தானும் பெருமைப்பட்டுக் கொண்டது
இவரிடம் ஒரு ஆயுதம் இருந்தது
மிதமிஞ்சிய சகிப்புத்தன்மை என்னும் ஆயுதம்
நிதி கேட்டு நீட்டிய கையில்
எச்சில் உமிழ்ந்தவனிடம்
“நீங்கள் அன்போடு அளித்ததை
நான் எனக்காக வைத்துக் கொள்கிறேன்
இந்த ஆதரவற்றவர்களுக்காக உதவுங்கள்” என்று
மறு கையை மீண்டும் நீட்டியவர்
இவரைப் பிடிக்காது என்று
யாரும் சொல்லிடுவர்
என்று நான் நம்பவில்லை
அன்னையைப் பிடிக்காதவர்
அகிலத்தில் உண்டோ......?
அப்படியெனில்,
அன்னை தெரசாவைப் பிடிக்காதவரும்.........


இந்த தொடர் பதிவின் விதிமுறைப்படி யாராவது இரண்டு பேரை இணைக்க வேண்டுமாம்...எனவே நான் அழைக்க விரும்புவது...

சாரல் – பூர்ணிமா சரண்
என் உயிரே - அபுஅஃப்ஸர்


Saturday, February 21, 2009

எல்லாம் சரியாகத்தான் செய்கிறாய்...


அன்று வீட்டை விட்டு
புறப்படும் போதே
வானொலியில்
வானிலை அறிக்கை
காற்றின் ஈரப்பதத்தில்
காதல் கலந்து விட்டதால்
இன்று சுழற்றி அடிக்கும்
தென்றல் காற்றில்
உங்கள் மனம்
கொள்ளையடிக்கப் படலாம்...

நாம் முதன் முதலில்
சந்தித்துக் கொண்ட பூங்காவில்
எழுதி வைக்கப்பட்டிருந்தது
பூக்களைப் பறிக்காதீர்கள்
மீறினால்...
நீங்கள் எதிர் பாராமல்
சந்திக்கும் பூவினால்
வலுக்கட்டாயமாக
உங்கள் இதயம்
பறிக்கப்படக் கூடும்...

இந்த இரண்டு
எச்சரிக்கைகளையும் மீறியதில்
இதோ என் பக்கத்தில்
இப்போது என்ன நடக்கிறது...?

சொல்ல வந்ததை
சொல்ல முடியாமல்
நகம் கடித்து
தவறாக சொல்லிவிட்டதாய்
நினைத்து
உதடு கடித்து
உன் வெட்கத்தைக்
கால் வழியே கோலமாக்கி
எல்லாம் சரியாகத்தான்
செய்கிறாய்...
ஆனாலும்
உனக்கெதற்கு இவ்வளவு சிரமம்
அந்த இரண்டாவது
விசயத்தையாவது
நான் பார்த்துக்கொள்கிறேனே........


Saturday, February 14, 2009

இனி உன்னோடு தான்...



உனக்கு நினைவிருக்கிறதா...?
நம் முதல் சந்திப்பு
அந்த செவ்வரளி மரத்தின் நிழல்
அதுவரை நுகர்ந்திராத
ஏதோ ஒரு மலரின் வாசம்
வாசனைக்கு வசப்பட்ட
வண்டு ஒன்று
அந்த பட்டப் பகலில்
மலர்களை
வட்டமடித்துத் திரிந்தது

அங்கே
நம் பார்வைகள்
பயிரிடப்பட்டதில்
அமோகமாய்
விளைந்திருந்தது காதல்
உன் காதலின் கவன ஈர்ப்புத்
தீர்மானத்தில் கைது செய்யப்பட்டன
என் கனவுகள்
உன் வீட்டிற்குத் தெரியாமல்
எனக்காக நீ மறைத்து
எடுத்து வந்திருந்த
வாழ்த்து அட்டை

காதலர்கள் பரிமாறிக் கொண்ட
முதல் பரிசுப் பொருள்
மலர்களாகத் தான்
இருக்க வேண்டும்
என்ற நம்பிக்கையில்
சற்று தள்ளியதொரு கடையில்
உனக்காக
நான் வாங்கிய
வேற்று தேசத்தில்
பூத்த பூவொன்று
விற்றுக் கொண்டிருந்த
சிவப்பு ரோஜாக்கள்

நான் கவனித்தேன்
காதலர்கள்
தன்னைத்தான் அதிகமாக
பரிமாறிக் கொள்கிறார்கள் என்ற
கர்வத்தில் அந்த ரோஜாவுக்கு
ஒரு முள் முளைத்திருந்தது

எப்படி காதலை சொல்லிக்கொள்வது
என்று தெரியாமல் அங்கு
அடர்ந்திருந்த மௌனங்கள்
அந்த இரண்டு நிமிட மௌனதில்
தொலைந்து போயிருந்தது
என் இரண்டு வருட ஆயுள்...

கடைசியில் எப்படித்தான்
சொல்லிக் கொண்டோம்
நம் காதலை...?
வார்த்தையில் சொல்லியிருந்தால்
எழுதிக்காட்டிவிடலாம்
மௌனத்தை எப்படி எழுத முடியும்...?

முத்தங்கள் என்ற பெயரில்
வெறும் சத்தங்களை மட்டுமே
பரிசளிக்க முடிந்த
சென்ற வருடம் போல்
இந்த வருடமும் முடியவில்லை
காதலர் தினத்தில்
உன்னை சேர்வதற்கு
ஆதலால்,
பதிவுத் தபாலில் பாசம்
பார்சலில் வந்திருக்கிறது
நம் வாழ்த்து அட்டைகளைத் தான்
சொன்னேன்

இப்போதைக்கு எனக்கு இருக்கும்
ஒரே ஆறுதல்
எத்தனை முறை படித்தாலும்
புதிதாகத் தோன்றும்
உன் முதல் கடிதத்தின்
கடைசி வரிகள் தான்

நீ அலைபேசியில் அனுப்பிய
இரண்டு குறுஞ்செய்திகள்
வாசித்துப் பார்த்தேன்
எனக்குத் தெரியும்
அவை காதலினால் வந்த
உன் கவிதையின் முயற்சி

உனது முதல் கவிதை

*“உன் மனதில்
நான் குடியிருக்கிறேன்
என்னைப் பார்க்க
ஆசையாய் இருந்தால்
உன்
இதயத்தில்
கை வைத்துப் பார்
உன் அன்புக்காக
நான் துடிப்பது தெரியும்...”

படித்ததும் நெகிழ்ந்தேன்...

உனது அடுத்த கவிதை

*“முதல் முறையாக
என்னை நினைத்து
நீ
கண்ணீர் விடுவாய்
எழுந்து உன் கண்ணீரைத்
துடைக்க முயற்சி செய்வேன்
நான்
இறந்துவிட்டேன்
என்பதையும் அறியாது...”

படித்ததும் அழுதேன்...

அதுவரை கொட்டிய மழை சட்டென நின்றது...மெல்லத் தெளிந்திருந்தது வானம்...என் மனதும் தான்...

இதோ புறப்பட்டுவிட்டேன் இந்தக் காதலர் தினம் மட்டுமல்ல வரும் எந்தக் காதலர் தினமும் இனி உன்னோடு தான்...நான் காதலிக்கிறேன் என்பதினாலல்ல உன்னால் இந்த அளவு காதலிக்கப் படுகிறேன் என்பதில் தான் பெருமிதம்கொள்கிறது நம் காதல்...



(பி.கு.
* குறிப்பிட்ட இரண்டு கவிதைகளும் மேலே சொன்னது போல் எனக்குக் குறுஞ்செய்தியில் வந்தவையே..........)



இனிய காதலர் தின வாழ்த்துக்கள்...



Tuesday, February 10, 2009

ஐந்து நிமிட ஆசையும்…வாழ்விழந்த வார்த்தைகளும்...



ஐந்து வருடங்கள்
காதல் பேசியிருக்கிறோம்
இன்னும் சில மாதத்தில்
மணநாளும் வந்து விடும்
விரல்கள் தொட்டுக் கொள்வதைக் கூட
விதிவிலக்காக்கியவள் நீ
என் ஆசையை சொன்னால்
என்ன நினைப்பாயோ...?
இந்த ஐந்து நிமிட ஆசைக்காக
ஐந்து வருடக் காதலை ஏதும்
தவறாக நினைத்திடுவாயோ...?
திருமணத்திற்குப் பின்
நமக்குள் தினம் நடக்கப் போகும்
ஒரு அழகிய நிகழ்வு தானென்றாலும்
இப்போது இதற்கு சம்மதிப்பாயா...?
இது ஒன்றும் தவிர்க்க வேண்டிய
ஆசையில்லை என்றாலும்
தவிர்க்க முடியாததால் தவிக்கிறேன்
நெடுநாட்களாக அடங்காத ஆசையின்
அதீத வலியில் பெற்றெடுக்கப்பட்டது
இந்தப் பேராசை...
ஐந்தே நிமிடங்கள்
நான் கண் மூடி தலைசாய
உன் மடி கொஞ்சம் தருவாயா.......?



வாழ்விழந்த வார்த்தைகள்...

வழக்கொழிந்த தமிழ் சொற்கள் தொடர் பதிவில சாரல் பூர்ணிமா சரண் என்னை டேக் பண்ணி இருந்தாங்க ஏதோ என்னால் முடிந்த சில வார்த்தைகளை எழுதியிருக்கிறேன்...

க்குரோணி – 21870 தேர், 21870 யானை, 65610 குதிரை, 109350 காலாள் கொண்ட சேனை
தபத்திரம் – குடை
ம்மி - பத்து இலட்சத்து எழுபத்தையாயிரத்து இரு நூற்றில் ஒரு பங்கு
சானம் – வடகீழ்த்திசை
ள்ளி – வெங்காயம்
ர்ணநாபி – சிலந்தி
ரிமலர் – செந்தாமரை
காலி – சலவைத் தொழிலாளி
வண்ணம் – மருதாணி
கரம் – மயில்
தவனம் – கடல்
சித்தியம் – தகுதி

இந்த வார்த்தைகளை எல்லாம் நான் எங்கே இருந்து எடுத்தேன்...அப்படின்னு நீங்க சுலபமாக கண்டு பிடித்து இருப்பீர்கள் என்று நம்புகிறேன்......................


Monday, February 2, 2009

இன்றும் தொடர்கிறது…


நமக்கான தனிமையின் எல்லைகள்
வரையறுக்கப் பட்டிருக்கவில்லை
என்ற போதிலும்
எனக்கான அவளைப் பற்றியும்
உனக்கான அவனைப் பற்றியும்
இரண்டங்குல இடைவெளியில்
பேசிக் கொண்ட ரகசியங்கள்
நமக்கான உறவில்
எந்த ஒரு மாற்றத்தையும்
ஏற்படுத்தி இருக்கவில்லை
இவன் தான் உனக்கான அவன் என்று
நீ அவனுடைய புகைப்படம் காட்டி
உனக்கு பிடித்திருக்கிறதா...?
என்று கேட்க்கும் வரை
அதன் பிறகு
நமக்கான இடைவெளி அகண்டது
அந்த அகண்ட வெளி முழுதும்
அர்த்த மற்ற எண்ணங்கள்
ஆக்கிரமித்துக் கொண்டன
அங்கொன்றும் இங்கொன்றுமாய்
சொல்ல வந்து சிதறுண்டன சொற்கள்
கால தாமதமாக எழுதப் பட்ட காதலால்
இலக்கணப் பிழையோடு
இன்றும் தொடர்கிறது
நமது நட்பு...................


Wednesday, January 28, 2009

உன் காதலினால்...சில நினைவுகள்...


வேலை நிமித்தமாக ஒரு மாத காலம் வெளியூர் செல்கிறேன். நம் திருமணத்திற்குப் பின் நாம் சந்திக்கும் முதல் பிரிவு அது. நான் புறப்படும் போது கட்டி அணைத்து நீ கொடுத்த முத்தத்தின் ஈரம் பயணக்களைப்பில் முகம் கழுவிய போதும் கலையாமல் இன்னும் அப்படியே இருக்கிறது. இதற்கு முன் எத்தனையோ நாட்கள் தனிமையில் இருந்திருக்கிறேன் உணர்ந்ததில்லை. இப்போது தான் தனிமை என்னைத் தத்தெடுத்துக் கொண்டதாய் ஒரு தவிப்பு. உன் காதலின் கட்டுப்பாட்டில் கடந்து சென்ற அந்த அழகான நாட்களின் நினைவுகள் கண்ணாடியில் தோன்றும் பிம்பங்களாய் என் மனக் கண்ணாடியில் பிரதி பலிக்கின்றன.

மணமான முதல் நாள் நான் உன் விரல் தொட்ட போது ஏற்பட்ட திடீர் ஸ்பரிசத்தில் உன் உடல் நடுங்கிய அந்த அழகிய நிமிடங்கள். முதல் முத்தத்தின் போது விழிகளுக்கும் இதழ்களுக்கும் இடையே நடந்த அந்த வெட்கப் போராட்டம். இப்படி நினைத்து நினைத்து ஆனந்தப்பட ஆயிரம் நினைவுகள் என் மனதில்.

கணினி நுட்ப்பங்களையும் ஜாவா போன்ற கணினி மொழிகளையும் சுலபமாகக் கற்றுத் தெரிந்து கொண்ட எனக்கு நம் மணமான புதிதில் உன் வெட்க மொழி புரியாமல் தடுமாறி இருக்கிறேன் பல முறை. வேண்டுமென்றால் வேண்டுமென்றும் வேண்டாமென்றாலும் வேண்டுமென்றும் அர்த்தமாமே உன் வெட்க மொழியில். எந்த ஒரு அகராதியிலும் படித்ததாய் நினைவில் இல்லை இது போன்ற அழகிய அர்த்தங்களை.

அந்த மழைக்கால மாலைப் பொழுதில் மயில்தோகை நிறத்தில் புடவை அணிந்து நீ நடந்து வந்த அழகைப் பார்த்திருந்தால் மயில்கள் மயங்கித்தான் போயிருக்கும். சூடான தேனீர் கோப்பையுடன் இனிப்பான பலகாரத்தட்டுகளுமாய் என் அருகில் அமர்ந்து ஆசையாய் ஊட்டி விட்டுப் பின் கடைசியாய் நீ கொடுத்த முத்தம் அந்த மழை நேரக் குளிருக்கு சூடான தேனீரை விட சூடாகத்தான் இருந்தது. அதன் பிறகு உன் முத்தத்தின் தித்திப்பில் இனிப்பான பலகாரம் இனிப்பின்றிப் போனது ஒன்றும் ஆச்சர்யமில்லை.

நினைவலைகள் நீண்டு கொண்டே போகின்றன நிலவொளியின் எதிர்த் திசையில் நிழல்கள் நீள்வது போல்.

கைகளில் பட்டுத் தெரிக்கும் மழைத் துளியின் சிதறல்களை ரசிக்கும் குழந்தையைப் போல் உன் கன்னத்தில் பட்டு தெரிக்கும் உன் வெட்கச் சிதறல்களை ரசிப்பதற்காக வேணும்...இது போன்ற இனியொரு பிரிவுப் பயணத்தை தவிர்த்திட வேண்டும். முன்னைக் காட்டிலும் ஆவலாய் இருக்கிறேன் உன்னைப் பார்ப்பதற்கு...எனக்குத் தெரியும் நீ என்னைக் காட்டிலும் ஆவலாய் இருப்பாயென்று............................


Friday, January 23, 2009

மீண்டும்...மீண்டும்...காதலோடு...


அது உலகத்தின் இறுதி நாள்
கலகத்தால் உலகம் அழிந்து விடுகிறது
கடைசி மனிதனின்
கடைசி மூச்சுக் காற்றில் கலந்து
எல்லாமுமாய் இருந்தது
எதுவுமில்லாமல் போய்விட்டது
சூன்யம் சூழ்ந்து கொள்கிறது
எங்கெங்கு காணினும் வெறுமை
காலங்கள் கணக்கின்றி கடக்கின்றன
வெறுமையில் வெறுப்படைந்த
இந்தப் பிரபஞ்ச நாயகன்
மீண்டும் தன் படைப்புத்
தொழிலைத் தொடங்க எண்ணி
தன் உயிர்க் காற்றை ஊதுகிறான்
உயிரினங்கள் உயிர்ப்பித்து
இரண்டிரண்டாய் பல்கிப் பரவுகின்றன
முதல் மனிதன் மட்டும் இறுதியாக
தனியாகப் படைக்கப்படுகிறான்
அவனுக்கு முன் இளமை மாறாத
அழகிய தேவதைகள் அணிவகுக்கப் பட்டு
இவர்களில் யாரை வேண்டுமானாலும்
நீ துணையாக்கிக் கொள்ளலாம்
என்று சொல்லப் படுகிறது
ஒருவர் பின் ஒருவராக
அனைவருடைய விழிகளையும்
மனதையும் பார்த்து விட்டு
”காதல் இல்லாத இவர்களுக்கு
என் கனவில் கூட இடமில்லை” என்று
மூலப்பொருளிடம் முதல் மனிதன் கூறுகிறான்
ஆச்சர்யமடைந்த ஆதிசக்தி
தனக்குள் நினைத்துக் கொள்கிறது
”மனிதா இவ்வளவு நல்லவனா நீ...?”
வேறு வழியின்றி அவனிடமிருந்தே
அவனுக்கான துணையை படைத்து
காதல் காற்றை இருவர் இதயத்திலும்
நிரப்பி பூமிக்கு அனுப்பிவிட்டு...
இனியொரு முறை இவ்வுலகத்தை
அழிக்கவேண்டியிருக்காது என்று
காலத்தைப் படைத்தவன்
காலப் புத்தகத்தில் தீர்ப்பெழுதி
கையெழுத்திடுகிறான் காதலோடு.........


Monday, January 19, 2009

ஒரு மழைத்துளியின் போராட்டம்…


சூல் கொள்ளப் பட்ட
மேகக் கருவறையின் வழியே
கோடிப் புள்ளிகளாய் கொட்டுகிறது மழை
மண்புழுவின் உபயத்தில் வெளியேறிய
மண்வாசம் சுவாசம் நிரப்புகிறது
மழைத்துளி ஒவ்வொன்றும்
மரம் மீதும் மலை மீதும் கடல் மீதும்
இன்னுமுள்ள எல்லாவற்றின் மீதும்
பட்டுத் தெறித்து பரவசப் படுத்துகிறது
மலர்களெல்லாம் மழை கண்ட மகிழ்ச்சியில்
மகரந்தச் சேர்க்கைக்கு மடல் அனுப்பி
ஒத்திகை பார்த்துக் கொண்டாடுகிறது
எல்லா மலர்களோடல்லாமல்
நீ மட்டும் தனி மலராய்
இவையனைத்தையும் வேடிக்கை
பார்த்துக் கொண்டிருக்கிறாய்
இந்த மழைத்துளியின் ஒரு துளி
உன் மேல் காதல் கொண்டு
சுழற்றி அடிக்கும் காற்றின்
உதவியோடு உன்னை நனைக்கிறது
தன் ஈரத்தால் குளிர்விக்கிறது
எப்படியாவது உன் காதலை பெற்றிட
தன்னாலான அனைத்தையும் செய்கிறது
ம்ம்ம்ஹூம்ம்ம்...
ஒன்றும் நடக்கவில்லை
உன்னில் எந்த ஒரு மாற்றமோ
காதல் துடிப்போ ஏற்படுவதாயில்லை
பாவம்...இந்த மழைத்துளி
அதற்கெப்படித் தெரியும்
நீ சுவாசத்தின் சுயமறியாதவள் என...
கடைசியாக நீயாவது சொல்லிவிடேன்
காகிதப்
பூக்கள்
காதல்
கொள்வதில்லை என்று...................



இந்த கவிதையை யூத்ஃபுல் விகடனில் படிக்க இங்கு செல்லலாம்...
 

Friday, January 16, 2009

இன்னும் சில முத்தங்கள்...



கண்களில் தொடங்கி
கன்னத்தில் வழிந்து
இதழ்களில் தேங்கும்
உன் வெட்கத் திருவிழாவில்
நான் தொலைந்து போய்விட்டேனடி...
எப்படியாவது என்னைக் கொஞ்சம்
தேடி எடுத்துக் கொஞ்சேன்...


இறுக்கி இறுக்கி
அணைத்துக் கொள்கிறாய்
என்னை உன் நினைவுகளில்
நேரில் வந்தால் மட்டும்
அதே இறுக்கத்தோடு
அணிந்து கொள்கிறாய்
உன் வெட்கத்தை...
இன்று மட்டுமாவது
உன் வெட்கத்தை அவிழ்த்துவிட்டு
என் முத்தத்தை அணிந்து கொள்வாயா நீ...



முத்தச் சத்தத்திலேயே உறங்கி
உன் இதழின் ஈரத்திலேயே
விழித்துப் பழகி விட்டேன்
இப்படி ஊடல் என்ற பெயரால்
எனக்கு உறக்கமும் விழிப்பும்
இல்லாமல் செய்து விட்டாயடி...



சங்கொலி கேட்டுத் தொடங்கும்
போர் போல
உன் சிணுங்கல் ஒலியில் தானே
தினமும் தொடங்குகிறது
நமது முத்தப் போர்
உன் வெட்கத்தை வெல்லாமல்
என்றும் முடியப்போவதில்லை
இந்தக் காதல் போர்...


ஒவ்வொரு முறையும்
பாடத்தில் தவறு செய்யும் போது
நான் உனக்கு
ஒரு முத்தம் தருவேன்
அதே போல் பாடத்தை
சரியாகச் செய்யும் போது
நீ எனக்கு
ஒரு முத்தம் தரவேண்டும்
என்று சொன்னதற்காக
இப்போதெல்லாம்
தவறுகளை மட்டுமே
சரியாகச் செய்கிறாயடி...



உன்னைப் பார்ப்பதற்காக
இரண்டாயிரம் மைல்கள்
கடந்து வந்திருக்கிறேன்
நீ என்னவென்றால்
கன்னத்தில் கொடுக்கிறாயடி
உன் முத்தத்தை...
கன்னத்திற்கும் உதட்டுக்கும் என்ன
இருபது மைல் தூரமா இருக்கிறது...?
இன்னும் கொஞ்சம் முயன்றுதான் பாரேன்
முடியாமலா போய்விடும் உன் இதழ்களால்............?


Tuesday, January 13, 2009

தலைவன்…தலைவி...பிரிவு...இரு கடிதம்...


பிரிந்திருக்கும் காவியக் காதலர்களின் கடிதப் பரிமாற்றம் எப்படி இருந்திருக்கும்...?...ஒரு வேளை இப்படி இருந்திருக்குமோ...?


தலைவியின் கடிதம் :


பொருள் தேடிப் புலம் பெயர்ந்த
என் மன்னவனே
மூன்று திங்கள் முழுதாய் முடிந்துவிட்டது
பாதித் திங்கள் பழுதின்றிப் போய்விட்டது
ஐந்து திங்களானால் அனலாய்ப் போய்விடுவேன்
பகல் பொழுதினில் பாதகமில்லை
இரவு வந்துவிட்டால்
இணைந்திருந்த நினைவெல்லாம்
இன்னல் பல காட்டுகிறது
நாம் சேர்ந்திருந்த சோலையெல்லாம்
என் சேலை பார்த்து சிரிக்கின்றது
மன்னவனே உன் சுவாசமின்றி
இங்கு மலர்களிலும் வாசமில்லை
உடல் மெலிந்தேன்
முகம் பொலிவிழந்தேன்
உறங்கும் உணர்விழந்தேன்
உள்ளத்தின் பிரிவுப் பிணி
உடல் முழுதும் படர்ந்திட்டது
பிணி போக்க மருந்தாக
நீ
வரும்
காலம்
எப்போது............?


தலைவனின் பதில் கடிதம் :

கண் இமைக்குள் வாழ்பவளே
என் இதயத்தை ஆள்பவளே
காலக்கோள் காட்டிய திசையில்
கடல் கடந்து வந்து விட்டேன்
இன்னும் சில காலம்
இருக்கலாமென எண்ணியிருந்தேன்
உன் பிரிவின் பிணி போக்க
வரும் திங்கள் வந்திடுவேன்
பொலிவிழந்த உன் முகத்தில்
முழுமதியைக் காட்டிடுவேன்
நம் பிரிவு சேரும் அப்பொழுதில்
என் வலக்கரம்
உன் வளைக்கரம் பற்றும் போது
உதறிய போர்வைக்குள் இருந்து
சிதறி மறையும் கனவுகளைப் போல
என் சுவாசச் சூட்டின் அலாவலில்
கரைந்து
மறையும்
உன்
பசலை.................



(பி.கு. ச்சும்மா...மரபு எழுத்துக்களைக் கலந்து எழுதிப் பார்க்கலாமே
என்ற ஒரு சிறிய ஆசை...பிழையிருப்பின் எப்போதும் போல்
இப்போதும் பொறுத்தருள்க.............)

இனிய தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்...

Friday, January 9, 2009

காதலாய்…என் டைரியின் சில பக்கங்கள்...



அவள் பெயர் மீரா. இதுவரை எந்தக் கண்ணனுக்காகவும் காத்திருந்ததாய் அவளில்லை. சில பெண்களைப் பார்த்தால் மீண்டும் ஒரு முறை பார்க்கத் தோன்றும் வேறு சில பெண்களிடம் பார்த்த உடனே பேசத் தோன்றும் வெகு சில பெண்களை மட்டுமே பக்கத்தில் பார்த்தாலும் எதுவுமே தோன்றாது, ஆனால் நம்மை விட்டு விலகிச் செல்லும் போது இதயம் துடிப்பது போல் இமைகளும் படபடக்கும். இதில் மீரா மூன்றாம் வகையைச் சார்ந்தவள். அவள் வயதென்ன...?...பெண்களிடம் கேட்கக் கூடாத கேள்வி அதானால் வேண்டாம். அவள் எப்படி இருப்பாள்...?...தாஜ்மஹாலுக்கு சுடிதார் போட்டு யாராவது பார்த்திருக்கிறீர்களா...?...அவள் சுடிதார் அணிந்து வந்தால் அப்படித்தான் இருக்கும்.

எங்கள் தெருவில் இருக்கும் நடனப் பள்ளியின் மாணவியவள். எப்படி இங்கு வந்து சேர்ந்திருப்பாள்...?... ஒரு வேளை யாராவது இங்கு மயில்களுக்கு நடனம் கற்றுக் கொடுப்பதாய் அவளிடம் தவறாகச் சொல்லி இருப்பார்களோ...?. கால்களில் சலங்கை கட்டி கைகளில் முத்திரை காட்டி விரல்களில் அபிநயம் பிடித்து இதழ்களில் ஜதி சொல்லி விழிகளில் விசித்திரம் படைக்கும் அதிசய தேவதையவள். முதன் முதலாய் அவளைப் பார்த்தது இன்னும் நினைவில் இருக்கிறது. அப்போது நினைத்துக் கொண்டேன் இவளைப் படைப்பதற்கு மட்டும் இறைவன் சற்றுக் கூடுதலாக நேரம் எடுத்துக் கொண்டிருப்பான் போலும்.

சலங்கை ஒலியோடு சிரிப்பொலியும் சேர்ந்து ஸ்வரங்கள் தாண்டிய ஒரு இசை அவள் நடந்து செல்லும் போதெல்லாம் ரசிக்கத் தவறியதில்லை. அன்று தான் அதுவரை வெற்றுக் காகிதங்களாய் இருந்த என் டைரியின் பக்கத்தில் முதல் முத்திரையாக அவள் பெயரை பதித்தது என் பேனா.

பின் வரும் நாட்களில் எங்களுக்குள் பார்வைகள் பேச்சுக்களாயின நட்பு நடை பயின்றது. எனக்கு இன்னது பிடிக்கும் உனக்கு என்ன பிடிக்கும் என்று பிடித்தவை பிடிக்காதவை என்று தொடங்கி அரசியலில் ஆரம்பித்து ஆன்மீகம் வரை பேசினோம். காதல் பற்றியும் பேசினோம்...ஆமாம், எங்கள் காதல் தவிர மற்ற அனைவருடைய காதல்களைப் பற்றியும் பேசினோம். நாட்களில் தொடந்த நட்பு மாதங்களைக் கடந்து ஆண்டுகளை அடைந்து கொண்டிருந்தது.

அன்று காலை மீராவிடம் இருந்து போன் வந்தது அரசுத்துறையில் பணிபுரியும் தன் அப்பாவிற்கு பதவி உயர்வோடு இடமாற்றமும் கிடைத்திருப்பதாகவும் அவர்கள் நாளைக்கே வடநாட்டுப் பக்கம் உள்ள ஒரு நகரத்திற்கு செல்ல விருப்பதாகவும். மாலையில் என்னை கட்டாயம் சந்திக்க வேண்டுமென்று என்னை அவள் வீட்டுற்கு வரச் சொல்லியிருந்தால். நானும் இதை விட்டால் வேறு சந்தர்ப்பம் கிடைக்காது இன்று எப்படியாவது என் காதலை மீராவிடம் சொல்லிவிட வேண்டும் என்று நினைத்து.  இவ்வளவு நாள் மனதிற்குள் மறைத்ததை இன்று கடிதத்தில் எழுதி என் கைகளுக்குள் மறைத்து வைத்துக் கொண்டு மாலையில் அவள் வீட்டிற்கு செல்கிறேன்.

என்னைக் கண்டதும் வாசலுக்கு ஓடி வந்து...”உனக்காகத்தாம்பா காத்துக்கிட்டு இருக்கிறேன். அப்பாவும் அம்மாவும் இப்பத்தான் வெளியில போறாங்க நாளைக்குக் காலையில அப்பாக்கு வேளை மாற்றலான ஊருக்குப் போகப் போறோம்ல...அதான் தெரிஞ்சவங்க கிட்ட சொல்லிட்டு வரப் போயிருக்காங்க.. நானும் எல்லார் கிட்டயும் போன்லயே சொல்லிட்டேன் ஆனா உன்ன மட்டும் நேர்ல பார்க்கனும் போல இருந்தது அதான் உன்ன வீட்டுக்கு வரச்சொன்னேன்.” என்று பட படவென்று மூச்சு விடாமல் சொல்லி முடித்தால்.

அப்போது நான்ஏன் மீரா இந்த ஊரவிட்டு எங்களயெல்லாம் விட்டுட்டுப் போக உனக்கு வருத்தமா இல்லையா...?” அதற்கு அவள் வருத்தமாத்தாம்பா இருக்கு மத்தவங்களவிடு உன்ன விட்டுப் போறோமேன்னுதான் ரொம்ப வருத்தமா இருக்கு என்ன செய்ய ...?...ஆனா,  உன்ன மட்டும் எனக்கு ரொம்ப பிடிக்கும் ஏன் தெரியுமா...?...பழகின மூனாவது நாளே லவ் லட்டரோட வந்து நிக்கிற பசங்களுக்கு மத்தியில இவ்வளவு நாள் பழகியும், ஒரு நல்ல நண்பனா தூய்மையான தோழனா என்கிட்ட பழகின விதம் என்னால என்னைக்குமே மறக்க முடியாது...”அப்போது நான் அவளிடம் சொல்ல வந்த வார்த்தைகள் அனைத்தும் என் நாவின் நுனிவரை வந்து உமிழ்நீருக்குள் அமிழ்ந்து போயின.

அதன் பிறகு அவள் சொன்ன வார்தைகள் எதுவும் என் செவிகளில் விழவில்லை. அவளிடம் எப்படி விடை பெற்று வீடு வந்து சேர்ந்தேன் என்று இதுவரை எனக்குத் தெரியவில்லை. காதலில் உருகி உருகி எழுதிய என் விரல்களே முதலும் கடைசியுமான என் காதல் கடிதத்தைக் கிழித்தெறிந்தன இதயத்தில் வலியோடு.

அதுவரை என் டைரியின் பக்கங்களில் மூன்று புள்ளி வைத்து அடுத்த பக்கத்தை அடுத்த நாள் தொடருவதை வழக்கமாக்கியிருந்தேன். இப்போதும் மூன்று புள்ளி வைக்கிறேன் அவள் நினைவுகளையாவது தொடர வேண்டுமென்று ...முடிவில் என்னையும் அறியாமல் ஒரு முற்றுப்புள்ளி வைத்துவிடுகிறது என் கண்ணீர்த் துளி...

என் டைரியின் பக்கங்கள் மீண்டும் வெற்றுக் காகிதங்களாகவே இன்றும்...

இது போல் இன்னும் எத்தனை வீடுகளில் டைரியின் பக்கங்கள் எழுதப் படாமல் வெற்றுக் காகிதங்களாய் இருக்கின்றனவோ...?...ஆசை ஆசையாய் எழுதப்பட்ட எத்தனை காதல் கடிதங்கள் கொடுக்கப் படாமல் இப்படிக் கிழிக்கப் பட்டிருக்கின்றனவோ...?

உடைக்கப் படாத உண்டியலில் ஆசையாய் சேர்த்து வைத்த சில்லரைக் காசுகளைப் போல் ஒவ்வொருவர் மனதிலும் திறக்கப் படாத நினைவுகள் சில மறக்கப் படாமல் இருக்கத்தான் செய்கின்றன. பழைய நினைவுகளில்  மனநீராடி நிகழ்வுலகிற்கு வருகிறேன். இங்கே இப்போது அன்பாய் அழகாய் என் மனைவி.
தத்தித்தாவி என் மடியில் கட்டிப்புரண்டு தன் வெள்ளைச் சிரிப்பில் என்னை சிறை வைக்கும் குட்டி தேவதையாய் என் செல்ல மகள். இப்போது இவர்கள் தான் என்னுலகம்.
இதோ சமையலறையில் இருக்கும் என் மனைவி விளையாடிக் கொண்டிருக்கும் என் மகளை அழைத்து ஏதோ சொல்லுகிறாள்...என்னவென்று கேட்போமா...

”மீரா.............!... அப்பா எழுந்துட்டாங்களான்னு பாரும்மா...எழுந்த உடனே காஃபி கேட்டாங்க...”

இந்த குட்டி மீரா போன்ற குழந்தைகளின் பெயர்களுக்குப் பின்னால் சொல்லப் படாத காதல்கள் எத்தனை எத்தனையோ.................................?



(பி.கு. இது 99.99% கற்பனை மட்டுமே...நமக்கு டைரி எழுதுர பழக்கமெல்லாம் கிடையாது. அப்படியே எழுதினாலும் கவிதைன்ற பேரால எதையாவது கிறுக்கி வைப்போமே தவிர சொந்தக் கதை சோகக் கதையெல்லாம் எழுத மாட்டோம்...பிற்காலத்தில இந்த மாதிரி டைரிங்க தான் டைம் பார்க்காம டைம்-பாமா வெடிக்கும்னு நாங்களும் கேள்விப் பட்டிருக்கிறோம்ல........)