Thursday, May 21, 2009

காதல் வந்த காலமெது…?


பெயர் தெரியாத
பெண் குழந்தைகளையெல்லாம்
நான்
உன் பெயர் சொல்லி
அழைத்த போது
தொடங்கியிருக்க வேண்டும்...

அல்லது...

என் பெயர் சூட்டப் பட்ட
ஆண் குழந்தையை
பெயர் சொல்லியழைக்க
நீ
தயங்கி நின்ற போதேனும்
ஆரம்பித்திருக்கக் கூடும்...

இல்லையெனில்...

எப்போதும்
என் கண்ணைப் பார்த்து
பேசும் நீ
முதன் முதலாய்
மண்ணைப் பார்த்துப்
பேசும் போதாவது
தோன்றியிருக்கலாம்...

அதுவும் இல்லையெனில்...

கொஞ்சம் கொஞ்சமாய்
பேச ஆரம்பித்த
நீ
கொஞ்சிக் கொஞ்சி
பேச ஆரம்பித்த போது கூட
நிகழ்ந்திருக்கலாம்
அந்த மாற்றம்...

இவையெதுவும் இல்லையெனில்...

நம் விழிகளின்
விலகாத பார்வை
சற்றே விலகி
உன் வெட்கத்தில் விழுந்து
முத்தத்தில் நனைந்த வேளையில்
தானும் சேர்ந்தே
நனைந்திருக்கலாம்
நம்முடனான காதல்.....

எத்தனையோ பெண்கள்
இருக்கையில்
என்னை மட்டும்
உனக்குப் பிடித்துப் போனதெப்படி...?
இது
ஆயிரம் முறை நீ
என்னிடம்
கேட்ட கேள்வி...

ஒரு முறையேனும்
உனக்கு சொல்ல நினைத்து
சொல்லாத பதில்...

வேறு யாரைப் பார்க்கும் போதும்
உயிர்க் காற்று
என் உள்சுவாசம் மறுத்ததாய்
இதுவரை
என்
நினைவில் இல்லையடி..................


Thursday, May 7, 2009

காதல்…ஒரு அழகிய முரண்பாடு…


மலர் சூடிச் சென்ற
பெண்களில்
என் மனம் சூடிச்
சென்றவள் நீ
மலர் வாடினால்
தூக்கி எறிகிறாய்
என் மனம் வாடினால்
அணைத்து
மகிழ்விக்கிறாய்
காதலில் மட்டும்
என்ன ஒரு அழகிய
முரண்பாடு...

மயிலிறகை புத்தகத்திற்குள்
வைத்தால் குட்டி போடுமாமே
உன் கூந்தல்
இழையும் கூட
அப்படித்தானோ...?

உனக்காக காத்திருக்கும் பொழுது
வாலறுந்த பட்டமென
தத்தளிக்கும் மனது
நீ
அருகில் வந்த உடன்
நூலறுந்த பட்டமாய்
உன் கூந்தலுக்கிடையில்
சிக்கிக் கொள்கிறது

தட்டுத் தடுமாறி
பேச ஆரம்பித்தாலும்
தெளிவாகப் பேசி விடுகிறாய் நீ
தெளிவாகப்
பேச ஆரம்பித்தாலும்
முடிவில்
தடுமாறி விடுகிறேன் நான்...

இன்று முழுதும்
நீ வீட்டை விட்டு
வெளியே வரவில்லை
உன்னைப் பார்க்காமல்
இனி மலர்வதில்லை என்று
தீர்மானம் நிறைவேற்றி
இருக்கின்றன
நீ
வெட்கம் ஊற்றி வளர்த்த
உன் தோட்டத்து
மலர்களெல்லாம்

உன் புன்னகை திருடிப்
பூத்திருக்கும்
ரோஜாக்களில் மட்டும்
முட்கள் இருப்பதில்லை

நிழல் தேடி
நாம் மரம்
ஒதுங்குவது போல்
உன் மனம் தேடி
என் உயிர் ஒதுங்குமிடம்
நம் காதல்

நிலவின் ஒளியை மட்டுமே
உண்டு வாழப் படைக்கப் பட்ட
சக்கரவாகப் பறவை போல
உன் வெட்கத்தை மட்டுமே
உண்டு வாழ
காதல்
என்னை படைத்திருக்கிறது
உன் வெட்கம் குறையும்
சில நேரங்களில் மட்டும்
உன் முத்தங்களையும்.........